திருச்செந்தூர் காவடி சிந்து
பாடியவர் : சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ
செந்தூர் என்றொரு தேசம் – அங்கு
செந்தில் ஆண்டவர் வாசம் – ஒப்பு
இல்லை என சொல்லும்படி
உலகை அவன் காத்தபடி நின்றான்
எனை கொண்டான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
பக்தர்கள் மீதுதான் பாசம் - பணிய
பாவங்கள் ஆகிடும் நாசம் – அந்த
தேவர்கள் துயர் போக்க
சூரனை வதம் செய்த பாலன்
பெரும் வீரன்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
ஆதிசங்கரர் நோய் தீர்த்தான் – அவர்
பாடிய புஜங்கம் கேட்டான் – பன்னீர்
இலை கொண்டு தருகின்ற
விபூதி அணிந்திட்டால் போதும்
நோய் போகும்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
குழந்தை வடிவிலே வந்தான் – குமர
குருபரன் வாய்பேசச் செய்தான் – கந்தர்
கலிவெண்பா அவர் பாட
தமிழ் தந்து அருள் செய்து நின்றான்
உள்ளம் மகிழ்ந்தான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
சஷ்டியில் விரதம் இருந்து – அவன்
சன்னதி வந்து தொழுது – பிள்ளை
வரம் கேட்டால் வடிவேலன்
பிள்ளையாய் வந்தில்லம் பிறப்பான்
இன்பம் நிறைப்பான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
ஓமெனும் பிரணவ வடிவம் – எங்கள்
ஓராறு முகனின் இல்லம் – மலை
ஏறும் சுமை கொடுக்காமல்
தரை மீதில் நின்றபடி அருள்வான்
வினை களைவான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
வேல் வேல் என்று நீ பாடு – வெற்றி
கூடியே வந்திடும் பாரு - வளர்
பிறைபோல நலம் வளர
பிறை சூடி மகன் வேலன் அருள்வான்
வளம் தருவான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
~♤~♤~♤~